சமூக வலைதளம் மூலம் சுலபமாக பிரபலமாகி பின்னர் அந்த புகழை காப்பாற்றி கொள்ளாமல் தனக்குத் தோன்றியதெல்லாம் செய்து சர்ச்சையில் சிக்கியவர் தான் டிடிஎஃப் வாசன். இவர் இந்த அளவுக்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம், ஒரே ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் தான். கொரோனா சமயத்தின் போது அவரது சொந்த ஊரில் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட அதில் ஏராளமான இளைஞர்கள் கூடினார்கள்.
வாசனுக்கு கூடிய 2கே கிட்ஸ் களின் கூட்டத்தை பார்த்து தமிழ்நாடே வியந்து போனது. யார் இந்த வாசன் என்று பலரும், திரும்பிப் பார்க்க அவர் youtube வீடியோவில் பைக் ரேஸ் தொடர்பான காட்சிகளை அதிகம் பதிவிட்டது தெரியவந்தது. இதன் மூலம் பிரபலமடைந்தார் டிடிஎஃப் வாசன்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர் சர்ச்சைகளிலும் சிக்க ஆரம்பித்தார். செல்போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, அதி வேகத்தில் பைக் ஓட்டுவது என அவர் மீது புகார் எழுந்தது. காஞ்சிபுரத்தில் இப்படி அதிவேகமாக செல்லும்போது விபத்தில் சிக்கினார் டிடிஎஃப் வாசன்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரின் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், வாசனை சுற்றிய சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான சூழலில், வாசன் வெள்ளித்திரையிலும் தோன்ற தயாரானார்.
செல்அம் இயக்கத்தில், மஞ்சள் வீரன் என்னும் படத்தில் அவர் நடிக்க இருந்தார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகி இருந்தது. ஆனால் பல மாதங்கள் கழித்து, மஞ்சள் வீரன் திரைப்படம் கைவிடப்பட்டதாக அதன் இயக்குனர் அறிவித்தார். இதனால் வாசன் மற்றும் செல்அம் இடையே வார்த்தை போர் முற்றியது.
இப்படி இருக்க, தற்போது டிடிஎஃப் வாசன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த கருணாகரன் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஐபிஎல் அதாவது, இந்தியன் பீனல் லா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆடுகளம் கிஷோர், சிங்கம்புலி அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.





